அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. இந்த வழக்கின் விசாரணையை 10 ஆம் தேதிக்கு உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதி மன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி உள்கட்சி விவகாரம் குறித்து அதிகார வரம்பு உள்ளதா என்று ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்தார். அதில், 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ளதால் தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் காலம் தாழ்த்துவது முறையல்ல என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் காலக்கெடு நிர்ணயிக்க தேவையில்லை.” என உறுதியளித்தனர். இதனிடையே தங்கள் தரப்புக்கு மனு நகல்கள் வழங்கப்படவில்லை என ஓபிஎஸ், பெங்களூர் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.