மரக்கார் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி ரூ. 16 கோடி வரை மோசடி செய்த இராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவர் 2 வருடங்களுக்கு முன் பிரபல மரக்கார் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு தமிழகம் முழுவதும் கிளை திறக்க உள்ளதாகவும் விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்கள் பகுதியில் பிரியாணி கடை திறப்பதற்காக தொடர்பு கொண்டுள்ளனர். உரிமத்திற்கு ரூபாய் 5.18 லட்சம் சிலரிடம் 10 லட்சம் வரை என சுமார் 239 பேரிடம் மொத்தம் ரூபாய் 16 கோடி வரை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டு அனைவருக்கும் கொடுத்துள்ளார். தொடக்கத்தில் 21 கடைகள் மட்டும் திறந்து சிறிது காலத்தில் மூடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இது வரை கடை திறக்கப் படவில்லை. பணமும் திருப்பி வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 239 பேரில் 80 பேர் வரை 4 கோடியே 14 லட்சம் மோசடி செய்ததாக இதுவரை விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளி அருகே உள்ள சோதனை சாவடி அருகே வைத்து கங்காதரனை கைது செய்து விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவசரப்பட்ட விஜய்! திமுக – அதிமுக சண்டையில் காணாமல் போகும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!