6 வயதை சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் மாதா நகரில் வசித்து வந்த பாபு-ஸ்ரீதேவி தம்பதியின் 6 வயது மகள் ஹாசினி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை விசாரித்து வந்த மௌலிவாக்கம் காவல்துறையினர் , அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் எனும் இளைஞர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, சிறுமி ஹாசினி வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் வெளியில் சொல்லாமல் இருக்க எரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்த போதிலும் 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காரணத்தினால் தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார்.
2017 டிசம்பர் 2ம் தேதி தஷ்வந்த் அவரது தாயார் சரளாவை அடித்து கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து மும்பைக்கு தப்பி சென்றார். தமிழக போலீசார் மும்பை சென்று கைது செய்ய போதும் போலீசாரிடம் இருந்து தப்பிய தஷ்வந்த்தை , மும்பை போலீசார் உதவியுடன் பிடித்து தமிழகம் அழைத்துவந்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த 2018 பிப்ரவரி மாதம் வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. 2018 பிப்ரவரி 19ம் தேதி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், தஷ்வந்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக இருந்திருந்தால் நிச்சயம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றிருக்க மாட்டோம்; தூக்கு தண்டனை என்பதால் விசாரணைக்கு ஏற்கிறோம் என தெரிவித்ததோடு தூக்கு தண்டனையையும் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் தஷ்வந்த் தொடர்பான வழக்கில் முறையாக ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை! அதேபோன்று சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் தஷ்வந்த் தான் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், டிஎன்ஏ (DNA) ஆய்வும் சரியானதாக ஒத்துப் போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து மரண தண்டனையை வழங்கிய கிழமை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம் என தீர்ப்பளித்ததோடு தஷ்வந்தை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.