சட்டப்பேரவையில் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜி.கே மணியை நீக்கி புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் முன்வைத்த கோரிக்ககையின் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருளுக்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மூவர், சபாநாயகரின் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணா நடத்தினர்.
இதற்கு விளக்கமளித்த சபாநாயகர், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டுமே தனி இருக்கை ஒதுக்கப்படும். மற்ற உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு எனது தீர்மானத்தின் அடிப்படையில் இருக்கும். பாமக கட்சியின் உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு வெளியே தீர்க்க வேண்டும்.
மேலும், 8 உறுப்பினர்கள் கொண்ட கட்சி ஒரு குழுவாக மட்டுமே செயல்படும். தன்னிடம் கொடுத்த கடிதம் பரிசீலனையில் உள்ளது. அதற்குள் அன்புமணி தரப்பு எம் எல் ஏக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தாா்.
ஆனால் தொடர்ச்சியாக அன்புமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில், உடனடியாக இருக்கைக்கு செல்லவில்லை என்றால் நடவடிக்கை எடுகப்படும் என சபாநாயகர் கடுமையான எச்சரித்தார். தங்களின் கோரிக்கையை ஏற்காமல் சபாநாயகர் நடந்து கொண்டதை கண்டித்து, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
துருவ் விக்ரமுக்கு வெற்றியை கொடுத்ததா ‘பைசன்’?…. திரை விமர்சனம்!