நடிகர் சூரி ‘விடுதலை’ படத்தை அடுத்து மீண்டும் ஒருமுறை வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சினிமாவில் எப்படியாவது ஆளாகிவிட வேண்டும் என்று போராடி வந்த சூரி-க்கு ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சூரி தனது தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.
விடுதலை படத்தில் சூரி அந்த காவலர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சூரி மேலும் 5 படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘விடுதலை’ படத்தை அடுத்து மீண்டும் ஒருமுறை வெற்றிமாறன் உடன் சூரி கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆம், வெற்றிமாறன் திரைக்கதை எழுதியுள்ள படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். ‘காக்கிச் சட்டை’ படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.
மதுரை கதைக்களத்தில் படம் அமைக்கப்பட்டுள்ளதாம். ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தின் பணிகளை முடித்த பிறகு சூரி இந்தப் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.
‘கூழாங்கல்’ படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டு காளி படத்திலும் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் அதை எடுத்து ‘ஏழு கடல் ஏழுமலை’ என்ற படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார் சூரி.