அதிமுக கூட்டணியில் மதிமுகவை சேரவிடாமல் சதி செய்ததற்கான பலனை ஓபிஎஸ் தற்போது அனுபவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று, நிர்வாக குழு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்…
அப்போது பேசிய அவர், 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அதிமுகவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்காக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மதிமுக அலுவலகத்திற்கு வந்து, தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மதிமுகக்கு சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகள் தருகிறோம் என்று கூறினர். 12 தொகுதிகள் என்பதை ஏற்க முடியாது என்று நான் கூறினேன். அம்மாவிடம் பேசி விட்டு வருவதாக கூறிச் சென்ற ஓ.பி.எஸ். மதிமுக கூட்டணிக்கு வர தயாராக இல்லை என தவறான தகவலை ஜெயலலிதாவிடம் கூறி இருக்கிறார். அதனால் தான் இதனால் 2011 தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிக்க நேர்ந்தது. அப்போது செய்த தவறுக்குத்தான் இப்போது ஒ.பி.எஸ் அனுபவிக்கிறார்.


15 தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா சீட்டை மதிமுகவுக்கு கொடுக்க ஜெயலலிதா தயாராக இருந்திருக்கிறார். ஆனால் ஒ.பி.எஸ் தான் திட்டடமிட்டு ஏதோ குளறுபடி செய்துள்ளார் என்ற தகவல்கள் நம்பிக்கையான பத்திரிகைகள் மூலமாக தமக்கு தெரிய வந்தது. உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்றும் கூட்டணி விவகாரத்தில் முடிவெடுப்பது உங்கள் சொந்த உரிமை. ஆனால் உங்கள் கட்சிக்கு எது ஏற்றதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என அருமையான ஒரு கடிதத்தை ஜெயலலிதா தமக்கு எழுதினார். தஞ்சாவூரில் கொளுத்தும் வெயிலில் ஒருநாள் தன்னை நேரடியாக சந்திக்க ஜெயலலிதா வந்தார். எம்.ஜி.ஆருக்காக கூட ஜெயலலிதா வெளியில் இறங்கி பேசியது இல்லை என கருத்துகள் வந்தன.
சிலரின் சதி செயல்களால் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படாமல் போனாலும் பின்னர் குறைந்த இடங்களை ஏற்றுக்கொண்டு திமுகவுடன் பயணிக்க ஆரம்பித்து இன்று வரை திமுக பற்றி ஒரு சொல் கூட விமர்சனம் செய்யாத கட்சியாக மதிமுக உள்ளது. தற்போது திராவிட இயக்கம் இருக்கக் கூடாது என சிலர் நினைப்பதால், திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், இதனால் தான் மதிமுக, திமுக உடன் கூட்டணியில் தொடர்கிறது.

த.வெ.க. பொதுக்குழுவில் விஜய் மிக மோசமாக திமுக வை விமர்சித்து இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு அங்கு செல்லாமல் திருச்சியில் கூட தங்காமல் ஒரே ஓட்டமாக சென்னை ஓடி வந்துவிட்டார் விஜய். அதைப்பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வருத்தப்படாமல் நிதி கொடுக்கிறேன் எல்லோரும் என்னை பார்க்க வாருங்கள் என்று அழைத்துள்ளார். எழவு கேட்பவர்கள் எழவு வீட்டிற்கு சென்று தான் எழவு கேட்பார்கள் யாரும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து எழவு கேட்க மாட்டார்கள்; தமிழ்நாடு வரலாற்றில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தனத்தை விஜய் செய்திருக்கிறார்.
நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம், திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்றெல்லாம் விஜய் பேசுவது, அரசியலில் ஆத்திச்சூடி கூட அறியாத ஒரு மனிதன் விஜய் ; ஆட்சிக்கு வந்து தற்போதே முதலமைச்சர் ஆகிவிட்டது போன்று விஜய் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.



