பிரைட் ரைஸ் தர தாமதமானதால் உணவகத்தின் கண்ணாடி மற்றும் காசாளரின் மண்டையை உடைத்த ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே உள்ள பெப்சி என்ற உணவகத்தில் இன்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் உணவருந்த சென்றுள்ளார். அங்கு ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து காத்திருந்த நிலையில் தனக்கு பிறகு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும், தனக்கு உணவு வழங்கவில்லை என கௌதம் உணவகத்தில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கௌதம் தனது நண்பர்களை செல்போன் மூலமாக அழைத்தார். உடனடியாக ஆறு பேர் அங்கு வந்த நிலையில் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்த கௌதம் உணவக மாஸ்டர், மற்றும் காசாளரை தாக்கினார். அருகில் இருந்த குக்கர் மூடியை எடுத்து தாக்கியதில் காசாளர் ஜாஹிரின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் சேர்ந்து கௌதமை பிடித்தனர் இதனை தொடர்ந்து அங்கு வந்த நண்பர்கள் 6 பேரும் தப்பி ஓடிய நிலையில், வீரபாண்டி காவல்துறையினரிடம் கௌதமை ஒப்படைத்தனர். உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கௌதம் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உணவகத்தை சேதப்படுத்தியது மற்றும் அங்கிருந்த ஊழியர்களை தாக்கியது ரத்த காயம் ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தை விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கௌதமை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆறு பேரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்த திருப்பூர் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உணவகத்தில் இதுபோன்று தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மழை வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க போர்கால நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்


