கோடை கொண்டாட்டம்- தொடங்கியது ’சென்னை விழா’
சென்னை தீவுத்தடலில் சர்வதேச கைவினை,கைத்தறி,கலை மற்றும் உணவு திருவிழா கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைவினைப் பொருட்கள் அரங்கில் உருவாக்கப்பட்ட பெரிய மண் பேனாவை விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் ‘சென்னை விழா’ எனும் தலைப்பில் சர்வதேச கைவினை, கைத்தறி கலை மற்றும் உணவு திருவிழா கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி வரும் மே மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் க.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், காந்தி, மா.சுப்ரமணியன் மற்றும் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன்,துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் பாரம்பரிய உணவு அரங்கு, கைவினை பொருட்கள், கைத்தறி உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகள் என மொத்தம் 311 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு மகளிர் சுயஉதவி குழுக்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்ட அனைத்து அரங்குகளில் இருந்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு வழங்கப்பட்டது. கைவினை பொருட்கள் அரங்கில் உருவாக்கப்பட்ட பெரிய மண் பேனாவை அமைச்சர் உதயநிதி விலை கொடுத்து வீட்டிற்கு வாங்கிசென்றார்.