பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் 81 பள்ளிகளில், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 7,081 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் 6,271 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 810 பேர் தோல்வியடைந்துள்ளனர். தோல்வியடைந்தவர்களில் 396 மாணவர்களும், 414 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை மீண்டும் தேர்வுக்கு தயார்படுத்தும் நோக்கில் மாநகராட்சி கல்விப் பிரிவு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிவாரியாக நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அதேபோன்ற பயிற்சிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, பள்ளிவாரியாகவும் பாடவாரியாகவும் தோல்வியடைந்த மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு, ஓரிரு நாட்களில் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள் இந்த கல்வியாண்டிலேயே இடைத்தேர்வில் தேர்ச்சி பெற்று மேல்கல்வியைத் தொடரும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
