எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து 216 அதிநவீன M982A1 Excalibur பீரங்கி குண்டுகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 47.1 மில்லியன் டாலர் (சுமார் ₹390 கோடி – ₹400 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற 18-வது இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கொள்கைக் குழு (Defence Policy Group) கூட்டத்தில், இந்த குண்டுகளை விரைவாக வழங்க இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த குண்டுகள் GPS தொழில்நுட்பம் மூலம் இயங்குபவை. இவை 40 முதல் 50 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை வெறும் 2 மீட்டர் துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டவை. இந்திய ராணுவம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் M777 ரக அல்ட்ரா லைட் ஹோவிட்சர் பீரங்கிகளில் இந்த எக்ஸ்காலிபர் குண்டுகளைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் இலக்குகளை மிகத் துல்லியமாக அழிக்க இது பெரிதும் உதவும். இதன் மூலம் தேவையற்ற சேதங்கள் தவிர்க்கப்பட்டு, முதல் தாக்குதலிலேயே இலக்கை வீழ்த்த முடியும்.
இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், “இந்த விற்பனை இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இந்தியாவுக்கு இது உதவும்” என்று குறிப்பிட்டுள்ளது.
எக்ஸ்காலிபர் குண்டுகளுடன் சேர்த்து, அமெரிக்காவிடம் இருந்து Javelin வகை டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளையும் (Anti-Tank Guided Missiles) வாங்குவதற்கு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையை கடக்க இனி கட்டணம்? ஈரான் அரசு அதிரடி முடிவு!
