2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி அவர்களின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை மயிலாப்பூரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.பி. சௌத்ரியின் மறைவு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரது குடும்பத்தாருக்கு விசிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். நடிகர் விஜய் நடித்த 100வது படத்தை தயாரிக்க வேண்டும் என்பது ஆர்.பி. சௌத்ரியின் நீண்டநாள் விருப்பமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைப்பு விடுக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை ஆதரவை முன்கூட்டியே கடிதமாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. பெரிய கட்சி என்ற அடிப்படையில் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதற்கு அனுமதி வழங்குவது ஆளுநரின் அரசியலமைப்புச் சார்ந்த கடமை” எனத் தெரிவித்தார்.
விசிக உயர்மட்ட குழுக் கூட்டம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும், விரைவில் கூட்டம் நடைபெற்று அதில் ஆலோசித்த பிறகே கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். தவெக ஆதரவு கோரி கடிதம் அளித்திருப்பதை மதிப்புடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த கோரிக்கையை புறக்கணிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், “தவெகவை ஆட்சி அமைக்க அனுமதிப்பதுதான் ஜனநாயகம். அதனை காலதாமதப்படுத்துவது திட்டமிட்ட அரசியல் சதி என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜக தமிழ்நாட்டு அரசியலில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது” என குற்றஞ்சாட்டினார்.
இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவு வழங்குவதில் தாமதம் காட்டுகின்றனவா என்ற கேள்விக்கு, “எங்களுக்கென கட்சித் தீர்மான நடைமுறைகள் உள்ளன. அவசரமாக முடிவெடுக்க முடியாது. தவெக வைத்துள்ள கோரிக்கையை மதிக்கிறோம். உயர்மட்ட குழுவில் விவாதித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார். அதிமுக – திமுக கூட்டணி குறித்த வதந்திகள் பற்றி கேட்கப்பட்டபோது, “நீங்களே அதை வதந்தி என்று கூறிவிட்டீர்களே” என சிரித்தபடி பதிலளித்தார்.
