தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவுகிறது. குறிப்பாக, தகுதித் தேர்வில் (Paper 1) அதிக மதிப்பெண் எடுத்தவர்கள், விளக்கக் கட்டுரைத் தாளில் (Paper 2) பூஜ்ஜியம் அல்லது மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த குளறுபடிகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நியமன எழுத்துத் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, அதுவரை பணிநியமன நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தமிழக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த 2025 டிசம்பர் 27 அன்று எழுத்துத் தேர்வை நடத்தியது. இதன் முடிவுகள் அண்மையில் (2026 ஜூன் 25) வெளியான நிலையில், தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள்
இந்தத் தேர்வு முடிவுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதை தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உணர்த்துகின்றன. உதாரணமாக:
தமிழ் பாடத்திற்கான முதல் தாளில் 150-க்கு 111 மதிப்பெண்கள் பெற்ற ஒரு தேர்வர், இரண்டாம் தாளில் 50-க்கு 0 (பூஜ்ஜியம்) மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்.
மற்றொரு தேர்வர் முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
முனைவர் (Ph.D) பட்டம் பெற்ற தகுதியான தேர்வர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெறும் நிலைக்குச் சென்றிருப்பது நம்பக்கூடியதாக இல்லை. இது தாள்களை மதிப்பீடு செய்ததில் உள்ள குளறுபடியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
திட்டமிட்ட முறைகேடா?
”இது உள்நோக்கமின்றி நடந்த சாதாரண குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பி எழுதிய பல்லாயிரக்கணக்கானோரின் நம்பிக்கைகள் இதன் மூலம் சிதைக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது” என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு விசிக விடுத்துள்ள கோரிக்கைகள்,
உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் எழுந்துள்ள புகார்கள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.
விசாரணை முழுமையாக முடிவடையும் வரை, பணிநியமனம் தொடர்பான அடுத்தகட்ட நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தகுதியான தேர்வர்களுக்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
‘தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்..!’ ஸ்டாலின் எச்சரிக்கை.. சுதாரித்த விஜய்..!
