
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 35 ஆண்டுகாலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வரும் மக்கள் பணிகளையும், பொதுநலத் தொண்டுகளையும் நீங்கள் நன்கறிவீர்கள். குறிப்பாக, தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காகப் பணியாற்றியதை யாரும் மறந்திருக்க முடியாது.
மாற்றத்தின் புதிய தொடக்கம் :
நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான எனது பொதுவாழ்வுப் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில் ஒரு மாற்றத்தின் புதிய தொடக்கமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, சிறப்பான நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) என்னை இணைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். இதன் மூலம் எனது அரசியல் பயணம் புதிய உத்வேகத்துடன் தொடரும்.

நாளை மகாபலிபுரத்தில் மாபெரும் இணைப்பு விழா:
இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை (02.07.2026) காலை 9.00 மணி முதல், மகாபலிபுரத்தில் உள்ள ‘Four Points by Sheraton’ ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஊடக நண்பர்கள் அனைவரும் நேரில் கலந்து கொண்டு, இதனைப் பதிவு செய்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
