”நான் பாட்டுக்கு செவனேனு தானடா படுத்துக் கிடந்தேன், என்னை எவன்டா 108 ஆம்புலன்ஸ்ல ஏத்திவிட்டது?” என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில், குடிபோதையில் நபர் ஒருவர் செய்த அட்ராசிட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலத்த சிரிப்பலைகளுடன் வைரலாகி வருகிறது.


நடந்தது என்ன?
பரமக்குடி பள்ளிவாசல் அருகே நபர் ஒருவர் சாலையில் விழுந்து கிடந்துள்ளார். அவர் விபத்தில் சிக்கி அடிபட்டுக் கிடக்கிறார் என்று நினைத்த அங்கிருந்த பொதுமக்கள், மனிதாபிமானத்தோடு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை ஏற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸில் வரும் வரை பயங்கர ‘கிக்’-கில் சுயநினைவின்றி வந்த அந்த நபர், மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததும் திடீரென எழுந்து விஸ்வரூபம் எடுத்தார்.
“என் 250 ரூபாய் செருப்பை கொடுங்கடா!”
மருத்துவமனைக்கு வந்த பிறகுதான் தான் இருப்பது ஆம்புலன்ஸ் என்றும், அழைத்து வந்தது அரசு மருத்துவமனை என்றும் அவருக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கு நின்றிருந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் போதை தலைக்கேறிய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசியதாவது:
”நான் பாட்டுக்கு பள்ளிவாசல் ஓரமா செவனேனு தானடா படுத்துக் கிடந்தேன்.. என்னை எவன்டா 108 ஆம்புலன்ஸ்ல ஏத்திவிட்டது? இப்ப பாரு, என்னோட 250 ரூபாய் மதிப்புள்ள செருப்பைக் காணோம். என் சட்டைப் பையில் இருந்த 3,500 ரூபாய் பணத்தையும் காணோம். என்ன கவர்மெண்டுடா இது? முதல்ல என் 250 ரூபாய் செருப்பை எடுத்துக் கொடுங்க, அப்பதான் நான் இங்கிருந்து நகருவேன்!”
என்று சத்தம் போட்டு அட்ராசிட்டி செய்யத் தொடங்கினார்.
விபத்தில் சிக்கியவரைப் பேராபத்தில் இருந்து காப்பாற்ற நினைத்து ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டால், அவர் தனது செருப்பையும், போதையையும் கலைத்த கோபத்தில் மருத்துவமனை ஊழியர்களையே அலறவிட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நகைச்சுவையான அலப்பறை வீடியோ தற்போது நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
