அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்ற கடைக்காரரிடம் பல ஆண்டுகளாக ஜி-பே (GPay) மூலம் லஞ்சம் பெற்று வந்த இரண்டு தலைமை காவலர்களைத் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் அதிரடியாகத் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா அத்திக்கடை பகுதியில் பாஸ்கர் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பல ஆண்டுகளாக ரகசியமாக குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சதீஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி, சில நாட்களுக்கு முன்பு அத்திக்கடை பகுதியில் உள்ள பாஸ்கரின் பெட்டிக்கடையில் தனிப்படை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த குட்கா, பான் மசாலா பொருட்கள் கையும் களவுமாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜி-பே (GPay) பரிவர்த்தனையில் அம்பலமான லஞ்சம்
இச்சம்பவம் குறித்து நன்னிலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) முத்துக்குமரன் தீவிர விசாரணை மேற்கொண்டார். பிடிபட்ட வியாபாரி பாஸ்கரின் வங்கிப் கணக்குகள் மற்றும் மொபைல் போனை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின. பாஸ்கர் தனது ‘ஜி-பே’ கணக்கிலிருந்து கடந்த சில ஆண்டுகளாகவே நன்னிலம் காவல் நிலைய தலைமை காவலர் பாரதிராஜா மற்றும் குடவாசல் காவல் நிலைய தலைமை காவலர் மனோகரன் ஆகிய இருவருக்கும் பல்லாயிரக்கணக்கான ரூபாயைப் பணப் பரிமாற்றம் செய்திருப்பது டிஜிட்டல் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டது. போலீஸார் குட்கா விற்பனைக்குத் துணையாக இருந்து கொண்டு மாதாந்திர லஞ்சப் பணத்தை ஆன்லைன் மூலம் பெற்று வந்தது விசாரணையில் உறுதியானது.

எஸ்பி அதிரடி நடவடிக்கை – இருவர் சஸ்பெண்ட்
தலைமை காவலர்களின் லஞ்ச ஒழிப்பு முறைகேட்டை உறுதி செய்த டிஎஸ்பி முத்துக்குமரன், இது குறித்த விரிவான விசாரணை அறிக்கையை மாவட்ட எஸ்பி சதீஷ்குமாரிடம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், நன்னிலம் தலைமை காவலர் பாரதிராஜா மற்றும் குடவாசல் தலைமை காவலர் மனோகரன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் (Suspension) செய்து எஸ்பி சதீஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியும் சிக்கினார்
டிஎஸ்பி தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் மற்றொரு அதிர்ச்சித் தகவலும் இடம் பெற்றுள்ளது. காவல்துறையினர் மட்டுமன்றி, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ஒருவரின் வங்கி கணக்கிற்கும் பாஸ்கரின் ஜி-பே மூலம் பெருமளவில் பணம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி சதீஷ்குமார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த இருவரே, வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அதற்குத் துணையாக இருந்த சம்பவம் திருவாரூர் மாவட்ட கிரைம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
