ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுப் பிரிவினருக்கான (General Category) குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட பொதுப் பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC), மாற்றுத்திறனாளிகள், பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 5 சதவீதம் குறைக்கப்பட்டது போல, பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அரசின் கொள்கை முடிவு
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாக அரசு தரப்பில் முக்கியக் கொள்கை முடிவு (Policy Decision) எடுக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனது கொள்கை முடிவை எடுக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை (TET Results) வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் குறைப்பு தொடர்பான அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவை வரும் ஜூலை 24-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவு வெளியான பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ள பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் இந்த உத்தரவு பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
