இயற்கை விவசாயம் மட்டுமே நாட்டுக்கு நிலையான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அளிக்கும் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில், இந்து பொருளாதார மன்றம் சார்பில் “விவசாயத்தில் கூட்டு முன் முயற்சிகள் மூலம் பாரதத்தின் மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரை பின்வருமாறு:

தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம்
”பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டின் கல்வி முறை, விவசாய முறை என அனைத்தையும் சிதைத்து, நம்முடைய ஒட்டுமொத்த வளங்களையும் சுரண்டினார்கள். அவர்களின் கலாச்சாரம் என்பது லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நுகர்வு கலாச்சாரம் ஆகும். ஆனால், நம்முடைய கலாச்சாரமும் பொருளாதாரமும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை.
பிரிட்டிஷ் கல்வி முறை வெறும் வேலைக்காரர்களை மட்டுமே உருவாக்கியது. ஆனால், அந்த நிலையை மாற்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களை (தொழில்முனைவோர்களை) உருவாக்கும் நோக்கில் தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.”
நாட்டு மாடுகளால் விவசாயத்தில் பல மடங்கு லாபம்
”செயற்கையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் நம் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை விவசாயம் மூலம் நம் நாட்டின் வேளாண்றையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். குறிப்பாக, இயற்கை விவசாயத்தில் நம் நாட்டு மாட்டு இனங்களைப் பயன்படுத்தினால் பல மடங்கு கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.
வெறும் அரசாங்க உத்தரவாலோ அல்லது கொள்கைகளாலோ மட்டும் மாற்றம் வந்துவிடாது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதனை உணர்ந்து செயல்பட உழைக்க வேண்டும்.”
உணவே விஷமாக மாறி வருகிறது: ஐஐடி இயக்குனர் காமகோடி கவலை
இக்கருத்தரங்கில் முன்னதாகப் பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்:
”விவசாயம் என்பது வற்றாத ‘அட்சய பாத்திரம்’ போன்றது. அதுதான் உலகிலேயே மிகவும் வெற்றிகரமான தொழில். ஆனால், இன்று ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் நாம் உண்ணும் உணவே விஷமாக மாறி வருகிறது.”
மேலும், “இயற்கை விவசாயமும், இயற்கை உரங்களும் தான் பயிர்களை உறுதியான தன்மையுடன் வளரச் செய்து, நல்ல உற்பத்தியைக் கொடுக்கும். விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டை 50% குறைக்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், நாம் ஒரு படி மேலே சென்று அதனை 75% வரை குறைக்க இலக்கு நிர்ணயித்துச் செயல்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இக்கருத்தரங்கில் விவசாயப் பெருங்குடி மக்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
