
அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் உணவகங்களுடன் கூடிய நவீன மதுபானக் கூடங்களுக்கு ( ரெஸ்ட்ரோ பார் – Resto-Bars) நேரடியாக அனுமதி வழங்க டாஸ்மாக் (TASMAC) நிர்வாகம் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள டாஸ்மாக் பார்களின் (Bars) எண்ணிக்கையைக் குறைத்து, வருவாயைப் பெருக்கும் நோக்கில் இந்த புதிய நெறிமுறையை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

அரசு வருவாய் உயர்வு
தற்போது தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனமகிழ் மன்றங்கள் (Recreation Clubs) மற்றும் சில குறிப்பிட்ட ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் FL2 மற்றும் FL3 உரிமங்களின் கீழ் விற்கப்படும் மதுபானங்களுக்கு மதிப்பு கூட்டு வரி (VAT) விதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக அரசுக்குக் கிடைக்க வேண்டிய கணிசமான வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.
இதற்கு மாற்றாக, மதிப்பு கூட்டு வரியுடன் (With VAT) கூடிய ‘ரெஸ்டோ பார்களுக்கு’ நேரடியாக அனுமதி வழங்குவதன் மூலம், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் கிடைக்கக்கூடிய ஒட்டுமொத்த வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என நிதி மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கை குறையும்
இந்த புதிய திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம், தற்போது டாஸ்மாக் கடைகளை ஒட்டி இயங்கி வரும் வழக்கமான பார்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும். தற்போதைய டாஸ்மாக் பார்களில் நிலவி வரும் சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு விரும்புவதாகவும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கோவா மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் இருப்பதைப் போல, முறையான உணவக வசதி (Restaurant) மற்றும் தரமான உள்கட்டமைப்பு கொண்ட சூழலில் மட்டுமே மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கும் வகையில் இந்த ‘ரெஸ்டோ பார்’ கலாச்சாரம் ஊக்குவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதிர்பார்ப்புகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும்
இந்தத் திட்டம் தற்போது ஆரம்பக்கட்ட ஆலோசனையில் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான முறையான அரசாணை (G.O.) மற்றும் உரிமக் கட்டண விபரங்கள், விதிமுறைகள் ஆகியவை இறுதி செய்யப்பட்ட பின்னரே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த புதிய Resto-Bar அனுமதித் திட்டமானது தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாடு, வணிக முதலீடுகள் மற்றும் அரசின் நிதியாதாரத்தை உயர்த்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
