பத்திரிகையாளர் விஜயனின் செல்போனை உடனே ஒப்படைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!![]()
விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அலைக்கழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஊடகங்களை மௌனமாக்கும் முயற்சிகள் எந்த அரசுக்கும் நல்ல பெயரை ஏற்படுத்தாது என்றும் மமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரத்தின் மண்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழ்நாடு என்பது எப்போதுமே கருத்துச் சுதந்திரத்திற்கும், பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் உலகளவில் பெயர் பெற்ற ஒரு புண்ணிய மண்ணாகும். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களை, விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தி மௌனமாக்க நினைக்கும் முயற்சிகள் ஒருபோதும் எந்தவொரு அரசுக்கும் நல்ல பெயரைத் தேடித்தந்துவிடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்போனை உடனே ஒப்படைக்க வேண்டும்
புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது மற்றும் அலைக்கழிக்கப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள அவர், “நெறியாளர் விஜயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவரது அலைபேசியை (செல்போன்) எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அவரிடம் திருப்பி வழங்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சுதந்திரத்தில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
அலைக்கழிப்பை நிறுத்த கோரிக்கை
மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் விசாரணை என்ற பெயரில் ஊடகத் துறையினரையும், பத்திரிகையாளர்களையும் தேவையற்ற முறையில் அலைக்கழிக்கும் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் எனத் தனது அறிக்கை வாயிலாக தவெக அரசை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
