தமிழ்நாடு நாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது, “மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, தியாகங்கள் பல செய்து மீட்டெடுக்கப்பட்ட நம் தாயகத்திற்கு, பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு’ என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிப் பெயர் சூட்டினார். நம் இனத்தின் தனித்துவமான அடையாளத்தை உலக அரங்கில் நிலைநிறுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது.”

மாநில உரிமைகளைக் காக்க உறுதி
தொடர்ந்து தனது வாழ்த்துச் செய்தியில், தமிழ் மண்ணின் தன்னாட்சியையும், தமிழ் மொழியின் பெருமையையும், மாநில உரிமைகளையும் காக்க திமுக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
திமுக தலைவரின் வாழ்த்துச் செய்தி
“நம் தாயகத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பேரறிஞர் அண்ணா பெயரிட்டு, நம் அரும்பெரும் அடையாளத்தை உலகிற்கு பறைசாற்றிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளாா். மேலும், மறைந்த முதல்வர் அண்ணாவால் ஜூலை 18-ஆம் தேதி ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை முன்னிட்டு, இந்நாளைத் ‘தமிழ்நாடு நாளாக’ அரசு அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறது.
