சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச் சென்ற வாலிபரின் தந்தையை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்துக் கொலை செய்த வழக்கில், பெண்ணின் கணவர் உட்பட 9 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷினி. இவருக்கும் ரத்தினவேல் என்பவருக்கும் திருமணம் ஆகி வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு சுபாஷினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதன் காரணமாக சுபாஷினியும் பிரபாகரனும் ஊரை விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.

ஆத்திரத்தில் கொடூரத் தாக்குதல்
தங்கள் குடும்பப் பெண்ணை அழைத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த சுபாஷினியின் கணவர் ரத்தினவேல் மற்றும் அவரது உறவினர்கள், பிரபாகரனைத் தேடி அலைந்துள்ளனர். அவர் கிடைக்காத நிலையில், பிரபாகரனின் தந்தையை பிடித்து வந்து அக்கம் பக்கத்தினர் பார்க்க மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரபாகரனின் தந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
9 பேருக்கு தண்டனை
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய ரத்தினவேல் உட்பட 11 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணையின் போதே குற்றம்சாட்டப்பட்ட இருவர் உயிரிழந்தனர். வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, பெண்ணின் கணவர் ரத்தினவேல் உள்ளிட்ட 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
