தேசியத் தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் ‘காக்கராய்ஜ ஜனதா கட்சி’ (CJP) மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், “மேலும் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும்” என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே அதிரடியாக அறிவித்துள்ளார்.
டெல்லியை உலுக்கும் ‘Gen Z’ மாணவர் புரட்சி
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உட்படப் பல முன்னணி தலைவர்களும், எதிர்க்கட்சிகளும் இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

அபிஜீத் திப்கேவின் அதிரடி அறிவிப்பு
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த CJP நிறுவனர் அபிஜீத் திப்கே, அரசிற்குத் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார், “மத்திய அரசு மாணவர்களின் நியாயமான குரலுக்கு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும். வெறும் வாக்குறுதிகளோடு நாங்கள் கலைந்து செல்லப்போவதில்லை. கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உரிய நிவாரணம் ஆகிய மேலும் 2 புதிய கோரிக்கைகளை முன்வைத்து, எங்களுடைய அறவழிப் போராட்டம் முழு வீச்சில் தொடரும்!” 
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்றதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், “காவல்துறையின் எத்தகைய அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது” என மாணவர் அமைப்பினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். மாணவர் சக்தியின் இந்த தொடர் போராட்ட அறிவிப்பு, மத்திய அரசு வட்டாரத்திலும் டெல்லி அரசியல் களத்திலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
