சேலத்தில் “காவல்துறையினர் தன் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்” எனக் கூறி, நடுரோட்டில் தனது கழுத்தில் கறி வெட்டும் அரிவாளை வைத்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியைக் காவல்துறையினர் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர்.
நடுரோட்டில் ரவுடியின் ரகளை:
சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (30). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்று காலை 7 மணி அளவில் இரும்பாலை சாலையில் உள்ள சித்தனூர் பகுதிக்குக் கறி வெட்டும் பெரிய அரிவாளுடன் வந்த அஜித்குமார், திடீரென “போலீசார் என் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போடுகிறார்கள்” எனக் கத்தியபடி, கையில் இருந்த அரிவாளால் தனது சொந்தத் தலையிலேயே கொத்திக் கொண்டார்.
மேலும், அரிவாளைத் தனது கழுத்தில் வைத்துக்கொண்டு “யாராவது அருகில் வந்தால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்” என மிரட்டி நடுரோட்டில் பெரும் ரகளையில் ஈடுபட்டார்.
சாமர்த்தியமாகச் செயல்பட்ட காவல் ஆய்வாளர்:
பட்டப்பகலில் ரவுடி அரிவாளுடன் ரகளை செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக இரும்பாலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவனைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவன் தொடர்ந்து கழுத்தில் அரிவாளை வைத்தபடி மிரட்டிக்கொண்டே இருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சுபாஷ், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு ரவுடி அஜித்குமாரிடம் நைஸாகப் பேசி திசைதிருப்பினார்.
அவர் பேச்சுவார்த்தை நடத்தியபடியே மிக அருகில் சென்று, எதிர்பாராத நேரத்தில் அவனது கையில் இருந்த அரிவாளைப் பொத்தெனப் பிடித்துக் கைப்பற்றினார்.
மருத்துவமனையில் அனுமதி & விசாரணை:
உடனடியாக மற்ற போலீசாரும் இணைந்து அவனை மடக்கிப் பிடித்தனர். தலையில் காயமடைந்திருந்த ரவுடி அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குக் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடுரோட்டில் ரவுடி ஒருவர் அரிவாளுடன் தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரும்பாலை காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
