புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் சொத்துத் தகராறு காரணமாக அதிமுக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் ராஜபாண்டியின் தம்பி மகனான ராஜராஜன் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ராஜபாண்டிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொத்து பங்கீடு தொடர்பாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜபாண்டி தரப்புக்கும் அவரது மூன்றாவது தமையன் மகனான ராஜராஜனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது.

அப்போது ராஜராஜனை ராஜபாண்டி அரிவாளால் விரட்டியுள்ளார். உயிர் தப்புவதற்காக அருகில் இருந்த மற்றொருவரின் வீட்டிற்குள் ஓடி ஒளிய முயன்ற ராஜராஜனை விடாமல் துரத்திச் சென்ற ராஜபாண்டி, அவரை வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காமல் அங்கிருந்த சமையல் காஸ் சிலிண்டரைத் தூக்கி ராஜராஜனின் தலையில் போட்டு கொடூரமாகப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், படுகொலை செய்யப்பட்ட ராஜராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, படுகொலை செய்த கொலையாளி ராஜபாண்டியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, ராஜராஜனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வடகாடு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, அசாதாரண சூழலைத் தவிர்க்க கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நாகை: சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் ‘புல்லட் மகாலிங்கம்’ வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
