கடந்த ஆண்டை விட இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அலைமோதியது
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு வருடந்தோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலாவுக்கு வரும் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன்படி இந்த வருடம் மே மாதம் 6ந் தேதி கோத்தகிரி நேரு பார்க்கில் காய்கறி கண்காட்சியுடன் கோடைக்கால விழா தொடங்கியது.

மேலும் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி போன்றவைகள் நடைபெற்றன.

மலர்க் கண்காட்சி நடைபெற்ற ஐந்து தினங்களிலே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுயிருப்பதாவது, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதம் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாப்பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாதத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர். இந்த நிலையில் சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடைக்கால விழா நேற்றுடன் முடிந்தது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.