எண்ணங்களை மேம்படுத்துவோம்
-என்.கே.மூர்த்தி
வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமானதாக மாற்றுவதும் அதனை சீரழிப்பதும் நமது எண்ணங்களில் தான் இருக்கிறது. நமது எண்ணங்கள் மேன்மையானதாக இருக்க வேண்டும், மேன்மையானதை மட்டும் சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் மேன்மையானதாக இருக்கும்.
நமது மன சக்தி மூன்று வகையானது

1.அறிவு சார்ந்த மனம்
இது மூளை சம்பந்தப்பட்டது. இதன் வழியாகத்தான் சிந்திக்கிறோம். நாம் சிந்திப்பதை உள் மனம் திரைக்காட்சியாக மாற்றும். நம் உள் மனம் மனக்காட்சிகளை நாமே உருவாக்கி அதனை இயக்க முடியும். நாம் எதை சிந்திக்கிறோம், எதைக் காட்சிப்படுத்துகிறோம், எதை இயக்குகிறோம் என்பதை வைத்து நமது வாழ்க்கை அமைகிறது.
- ஆழ் மனம்
நமது ஆழ்மனம் நிறைய நேரங்களில் அறிவு சார்ந்த பகுதிக்கு கட்டுப்படாது. ஆனால் தொடர் முயற்சியினால் மட்டுமே சிந்திப்பதை காட்சியாக மாற்ற முடியும்.
நமது அறிவு சார்ந்த சிந்தனை, இனிமேல் மது அருந்தக்கூடாது என்று சிந்திக்கும். புகை பிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தும். ஆனால் நமது ஆழ்மனம் இன்று ஒரு நாள் மட்டும் என்று சமாதானப்படுத்தி மீண்டும் மது அருந்த வைக்கும், புகைப்பிடிக்கத் தூண்டும்.
ஆழ்மனம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு பழக்கப்படுத்தி வைத்திருப்பதை தான் செய்யும். நாம் உயிர் வாழ்வதற்கான இதயத்துடிப்பு, சுவாசம், ஜீரணம் போன்ற அனைத்தையும் நமது ஆழ்மனம் தான் இயக்குகிறது.
அறிவு சார்ந்த மனதால் பல ஆயிரம் கோடி நரம்பு மண்டலங்கள் செய்யும் வேலையை கட்டுப்படுத்த முடியாது. உதாரணத்திற்கு புளிப்பு என்றால் நமது நாக்கில் ஒருவிதமான உமிழ்நீர் சுரக்கும். அந்த உமிழ்நீர் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இது அனைத்தையும் நமது ஆழ்மனம் தான் செய்கிறது.
உணர்வு, உணர்ச்சி, பயம், கோபம், அதிர்ச்சி, துயரம் இவை அனைத்தும் வருவதற்கு நமது ஆழ்மனதின் வேலைகளை காரணம். ஆழ்மனம் என்கிற மாபெரும் சக்தியை இயற்கை நமக்கு வழங்கி இருக்கிறது.
நமது உடலில் ஏற்படுகின்ற அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் நமது வாழ்க்கையில் நிகழ்கின்ற மாற்றங்களுக்கும் ஆழ்மனம் தான் காரணம்.
நமது ஆழ்மனதில் சிறிய வயதில் இருந்து இதுவரை பதிந்து கடந்த கால நிகழ்வுகள் தான் இப்பொழுதும் நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை. கடந்த காலத்தில் எதை எதை எல்லாம் சேர்த்து வைத்தோமோ அது தான் தற்போது நம் வாழ்க்கை என்பதை நினைவில் கொள்வோம்.
நல்லதோ, கெட்டதோ தற்போதைய வாழ்க்கைக்கு ஆழ்மனக் காட்சியே காரணம். அதனால் நமது ஆழ்மனம் நியாயம், அநியாயம் என்று எதையும் பார்ப்பதில்லை. நாம் காணும் மனக் காட்சியை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அதனை செயல்படுத்த தூண்டுகிறது.
சாலையில் நம்மை கடந்து போகும் ஒரு நபரை பார்த்தவுடன் திடீரென்று பிடித்து விடும். அதனை நமது ஆழ்வனும் படமாக பதிந்து வைத்துக்கொள்ளும். பின்னர் அந்த நபரை எப்படியாவது மீண்டும் பார்க்க வேண்டும். அவருடன் பேச வேண்டும் என்று ஆழ்மனம் தூண்டும். ஒரு கட்டத்தில் அந்த நபரை மீண்டும் சந்தித்து விடுவோம். இது அனைத்தும் ஆழ்மனதின் வேலைகள்.
இப்போதைய நமது வாழ்க்கையை நாம் தான் உருவாக்கினோம். அதேபோல் எதிர்காலத்தையும் நாம் தான் உருவாக்க வேண்டும். உருவாக்குவோம்! மூன்றாவது ஒரு மனம் இருக்கிறது. அது உன்னதமான மனம், உயர்ந்த மனம், அந்த மனதை அடையும் மனிதன் தெய்வமாக போற்றப்படுகிறான். அந்த மனதை அடைந்தவர்கள் புத்தர், இயேசு, நபிகள் நாயகம், ஜி கிருஷ்ணமூர்த்தி, வேதாத்திரி மகரிஷி என்று பலரை சொல்லலாம்.
- விழிப்புணர்வு மனம்
வாழ்க்கையின் ஒவ்வொரு கனமும் தன் எண்ணங்களின் செயல்பாடுகளை கவனிப்பது. அதுவும் தீவிரமாக கவனிப்பது ஒரு கட்டத்தில் அன்பு என்கிற பெருங்கடலில் மூழ்கி ஆனந்த வாழ்க்கையை அடைவது. சுருங்க சொல்ல வேண்டும் என்றால் மனம் மூன்று நிலையில் இயங்குகிறது. அது காட்சியாக மாறுகிறது. அதுவே வாழ்க்கையாகின்றன.
- அறிவு சார்ந்த மனம்
- ஆழ்மனம்
- விழிப்புணர்வு மனம்
இதுதான் நம் வாழ்க்கையின் இயக்கங்கள்.
- அறிவு சார்ந்த மனம் நமது தேவைகளையும், விருப்பங்களையும் செயல்படுத்த உதவுகிறது. இதனை அப்படியே மன காட்சிப்படுத்த ஆழ்மனதிற்கு உத்தரவிடுகிறது.
- ஆழ்மனம் வாழ்க்கையை வடிவமைக்கும். வாழவைக்கும் அளவற்ற சக்தி கொண்டது. இதயத்துடிப்பு, சுவாசம் என்று உயிர் வாழ்வதற்கும் ஆழ்மனம் தான் காரணம். பள்ளியில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கும், கடைசி மதிப்பெண் எடுப்பதற்கும் ஆழ்மனமே காரணம்.
- விழிப்புணர்வு மனம் துயரம், சோகம், கோபம், பொறாமை, உணர்ச்சி, மகிழ்ச்சி இவை அனைத்தையும் உற்று கவனிக்கும்.
கோபம் என்றால் என்ன? கோபம் ஏன் வருகிறது? கோபப்படுவதற்கு காரணம் ஏதாகிலும் இருக்கிறதா? காரணம் இருந்தால் அந்த காரணத்திற்கு தகுந்தாற்போல் கோபப்படுவது எப்படி? எவ்வளவு நேரம் கோபப்படலாம்? கோவப்பட்டால் தீர்வு கிடைக்குமா? என்று கோபம் வரும்போது அதை கவனிக்கிற மனம் தான் விழிப்புணர்வு மனம். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. அப்படி சாத்தியும் என்றால் அவர் மனிதன் இல்லை, தெய்வமாக கருதப்படுவார்.
நமது சிந்தனை நாளுக்கு நாள் உயர உயர விழிப்புணர்வு பெறுகிறோம். விழிப்புணர்வு பெற்று கோபம் பொறாமை போன்ற மனிதனுக்கு தோன்றும் அனைத்து உணர்வுகளையும் அழித்து விடுகிறோம். அதன் பின்னர் அங்கே அன்பு மட்டும் நிற்கும். அதுவே ஆனந்த நிலை.