அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபா் எம்.ஜி.எம். மாறனுக்கு சொந்தமான 216.40 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


சென்னை தொழிலதிபரும், தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான நேசமணி மாறன் முத்து என்ற எம்.ஜி.எம். மாறன், கடந்த 2005-2006, 2006-2007 ஆகிய நிதியாண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள இரு நிறுவனங்களில் 5 கோடியே 29 லட்சத்து 86,250 சிங்கப்பூா் டாலராக முதலீடு செய்தாா். இதை இந்திய ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் சிங்கப்பூா் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும்,இது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மோசடி என மாறனுக்கு சொந்தமான 216.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டப்படி இந்தியாவில் வசிக்கும் ஒருவா்,ரிசா்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டில் சொத்துகளைப் பெற்றாலோ அல்லது இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்தாலோ அவரது இந்தியச் சொத்தை பறிமுதல் செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே மாறனுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்த து. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எம் ஜி எம் மாறன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி என் பிரகாஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், மோசடிக்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும், மனுதாரர் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் வாதிட்டார். புலன்விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறையால் நடத்தப்படும் விசாரணையின் முன்னேற்றத்தில் முட்டுக்கட்டை போட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். அனைத்து ஆதார ஆவணங்களுடனும் மனுதாரர் தங்கள் விளக்கத்தை அமலாக்கத்துறையிடம் சமர்ப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
