தனது பத்து வயதான மாற்றுத்திறனாளி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் சுங்கத் கட்டே என்ற பகுதியில் உள்ள பிரசன்னா லே அவுட்டில் வசித்து வருபவர் 28 வயதான சுமா. இவருக்கு பத்து வயதில் பிரியங்கா என்ற மாற்றுத்திறனாளி மகள் இருந்துள்ளார். 17 வயதில் சுமாவுக்கு நஞ்சப்பா என்பவருடன் திருமணம் ஆன நிலையில், திருமணமான ஒரே வருடத்தில் இந்த தம்பதிக்கு மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்துள்ளார். மகள் பிரியங்காவிற்கு பல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் அவர் குணமடையாத நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு நஞ்சப்பா மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவித்து வந்த சுமா தனது மகளை கவனித்துக் கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். விரக்தியின் உச்சத்தில் இருந்த சுமா இன்று காலை தனது வீட்டில் இருந்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு அறையில் இருந்த மின்விசிறியில் தான் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்பொழுது வீட்டில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் எட்டிப் பார்த்தபோது சுமா தூக்குக் கயிற்றில் துடித்துக் கொண்டிருப்பதை கண்டு உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது மருத்துவமனையில் சுமா சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். சுமா ஏழ்மையின் காரணமாக மகளைக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தாரா அல்லது பின்புலமாக வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.