வென்டிலேட்டர் உதவியுடன் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை
வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரமாக சிகிச்சையில் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று (ஜூன் 21) காலை பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதய சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுமான் தலைமையிலான குழுவினர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். இதயத்தில் நான்கு இடங்களில் இருந்த அடைப்புகள் அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டன. பைபாஸ் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதய செயல்பாடு சீராக உள்ளது என்றும், இதய சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரின் உடல்நிலைத் தொடர்ந்துக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.


இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் நிறைவடைந்த நிலையில், தற்போதைய சூழலில் வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரமாக சிகிச்சையில் இருந்தார். ஏனெனில் அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்கு பிறகு செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை முடிந்து 24 மணிநேரத்துக்கு மேலாகியுள்ள நிலையில், செந்தில் பாலாஜி இயற்கையாக சுவாசித்துவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.