மதுரையில் தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் வல்லடிகாரர் கோயிலில் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க.அழகிரி ஆலோசனை நடத்திய போது பண பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் புகார் தெரிவித்ததால் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தி வீடியோ எடுத்தனர். அதற்கு அழகிரி மற்றும் அவரது தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து மு.க.அழகிரி, அவரது ஆதரவாளர்களான பி.எம்.மன்னன், திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக மு.க.அழகிரி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி லீலா பானு வழக்கை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
