வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.
ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும், வறுமையும் இருப்பதை தெரிந்து கொண்ட சிறுநீரகத்தை வாங்கி விற்கும் தரகர்கள் அனுராதாவிடம் பேசி மூளைச் சலவை செய்துள்ளனர்.

அதாவது, சிறுநீரகத்தை தானம் செய்தால் 7 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். பின்னர் சட்ட சிக்கல் வரக்கூடாது என்பதற்காக யாருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறதோ அவருடைய மனைவி அனுராதா என்பதுபோல் ஆதார் அட்டையில் திருத்தம் செய்துள்ளனர். ஆதார் அட்டையில் ஆள் மாறாட்டம் செய்து, அப்பெண்ணின் சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டபின், 5 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கிவிட்டு தரகர்கள் தலைமறைவாகி விட்டார்கள்.
இந்நிலையில், சிறுநீரகத்தை தானம் செய்தபின்பு, தனது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனுராதா தெரிவித்துள்ளார். மேலும், சிறுநீரக மோசடி கும்பல் மூலம் ஆள் மாறாட்டம் செய்து வழங்கப்பட்ட தனது ஆதார் அட்டையினால், அரசின் எந்தவொரு நலத்திட்டங்களையும் பெறமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.


