வேங்கைவயல் விவகாரம் – 8 பேரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை குறித்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேரும் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி கொடுக்க புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்று 190 நாட்கள் ஆகக்கூடிய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் தான் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் அன்று மூன்று பேர் ஆஜரான நிலையில் வேங்கைவயலை சேர்ந்த பட்டியலின மக்கள் 8 பேர் ஆஜராகவில்லை.
பின்னர் அந்த எட்டு பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில், பின்னர் சிபிசிஐடி போலீசார் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த பத்து பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும் அதேபோல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து 13 பேரில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக தற்போது காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கைவயலைச் சேர்ந்த எட்டு பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி பாதிக்கப்பட்ட மக்களையே போலீசார் பரிசோதனைக்கு உட்படுத்த முயல்வதாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த 8 பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் கடந்த 30ம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட 8 நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி அதனைப் படித்துப் பார்த்து அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கடந்த 1ம் தேதி மீண்டும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தை தெரிவிக்கலாம் என்று கூறி அந்த எட்டு பேரையும் அனுப்பி வைத்தார்.
அதன்பின் கடந்த 1ம் தேதி சம்பந்தப்பட்ட எட்டு பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் இவர்களுடன் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரான நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது என்று கேட்ட நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியன் இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட 8 நபர்களுக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை என்றும், அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட எட்டு பேரிடம் தனித்தனியாக எதற்காக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள்? என்று நீதிபதி ஜெயந்தி கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களையே விசாரணைக்கு உட்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும், அதனால் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் எட்டு பேரும் தனித்தனியாக ஒரே பதிலை தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதி, வேங்கவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டி என் ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரி கொடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 8 பேருக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றது. அவர்களின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. முதலில் மறுப்பு தெரிவித்த இவர்கள், நீதிமன்ற உத்தரவை அடுத்து சம்மதித்துள்ளனர்.