காஞ்சி சங்கராச்சாரி விஜயந்திரனை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என திராவிடர் விடுதலைக் கழக, பொதுச் செயலாளர் ,விடுதலை இராசேந்திரன் கூறியுள்ளாா்.
பெங்களூரில் நடந்த பிராமணர் மாநாட்டில் அவர் பேசிய பேச்சு சர்வதேச ‘இன ஒதுக்கல்’ சட்டப்படி குற்றம் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை, சேலம், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தெருமுனைக் கூட்டங்கள் வழியாக சங்கராச்சாரியின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது.
மேலும் ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழ்நாடு முழுதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சங்கர மடம் இருக்கும் காஞ்சிபுரத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் எதிரொலியாக பதவி விலகப் போவதாக காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அறிவித்துள்ளார். மடத்தின் 71 வது வாரிசாக ஆந்திராவைச் சார்ந்த கணேஷ ஷர்மா ட்ராவிட் என்ற ரிக் வேதக் காரர் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார் .
சுந்தரேச அய்யர் தலைமையில் மடத்தின் நிர்வாகிகள் காஞ்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி அவர்களை சந்தித்து இந்த தகவலை தெரிவித்துள்ளதோடு பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.