வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் நம் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் நம் நாட்டை தலை நிமிரச் செய்கிறார்கள். அரசியல் அதிகாரம் தலை தூக்கும்போது, அதை சற்று அமரவைத்து நம் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள். 1947ஆம் ஆண்டில் நாம் விடுதலை அடைந்தோம். அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய பிறகு 2 மாதங்கள் காத்திருந்து 1950 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேசிய நேரு, தற்போது தான் நாடு பூரண சுதந்திரம் அடைந்ததாக கூறினார். அதன்பிறகுதான் அந்த பூரண சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த நாளில் அவருடைய கனவு நினைவாகிவிட்டதா? சமுதாயத்தில் இன்னும் சாதிய பாகுபாடு இருக்கிறதா? இல்லையா? என்றால்… இன்னும் அது முழுமையாக ஒழிக்கப்படவில்லை. அதற்காக தான் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் இணைந்து போராடிக்கொண்டு இருக்கிறோம். ஒன்றிணைந்த சமூகத்தை உருவாக்குவோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.