சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும் விபத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி நெடுங்குளம் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட அறைகளில், சுமார் 200-ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (ஏப்ரல் 26, பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் அறையில் மூலப் பொருளில் உராய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடி விபத்தில், அந்த அறை முழுவதும் தரைமட்டமானதுடன், 10-க்கு மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன.
அப்போது கட்டிட இடுப்பாடுகளுக்குள் சிக்கி சொக்கலிங்கபுரம் கலைச்செல்வி( வயது 35), மாரியம்மாள்( வயது 38), கூமாபட்டி திருவாய்மொழி (வயது 40) ஆகிய 3-பெண்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவிர எம். புதுப்பட்டி பாக்கியலட்சுமி, ரெங்கபாளையம் லட்சுமி, கோபாலன் பட்டி ராமசுப்பு, கூமாபட்டி கோமதி ஆகிய நால்வரும் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எதிர்பாரத வகையில் விபத்தில் சிக்கி வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை, சில நேரம் பெற்றோர் இருவரையும் இழந்து அனாதையாகப் பரிதவிக்கின்ற குடும்பங்களின் கண்ணீர் மனதை பெரிதும் வாட்டும் துயரமாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் பல கோர பட்டாசு விபத்துகளில் உயிர் இழந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளையும், குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறிய போது, அந்த குடும்பங்கள் எத்தகைய வறுமையில் வாடுகிறது என்பதை அறிந்து அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளேன். பட்டாசு ஆலை விபத்துக்கள் நேர்வது எப்படி? கவனக்குறைவாக மருந்துகளை கையாள்வதால் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?
நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் விபத்துகள் ஏற்படும் போது நிற்கதியாய் போய் விடுகின்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு?சட்டமீறல்கள் காரணமாக விபத்து ஏற்பட்டால் தண்டிக்கபட வேண்டிய குற்றவாளிகள் யார்? என்பவை குறித்து தீர்க்கமான, திட்டவட்டமான, நிலையானதொரு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு.
தொடர்கதையாய் நடந்துவரும் பட்டாசு ஆலை விபத்துகளில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் மலிவாக போய்விட்ட அவலங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். உயிர்இழப்புகளுக்கு ஆளாகி நிலைகுலைந்து பரிதவிக்கும் குடும்பங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க , உயிர்ப்பலியாகும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் 25 லட்ச ரூபாய் இழப்பீட்டு நிவாரணம் கிடைக்கும் வகையில் காப்பீட்டு முறைகளில் புதிய விதிகளை உருவாக்கிச் செயல்படுத்த முன்வருமாறும் அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளாா்.