அமலாக்கத்துறை பிடியில் அமைச்சர்கள்- ஜெயக்குமார்
காவிரிக்காக சட்டப்போராட்டம் நடத்திய கட்சிதான் அதிமுக, பெங்களூருவுக்கு விருந்து சாப்பிடவே ஸ்டாலின் சென்றார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் மாநாடு தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், பொன்னையன், தம்பிதுரை உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்பின் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். A வகுப்பு சலுகை தாண்டி,விதிகளை மீறி செந்தில்பாலாஜிக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. விதிமீறல் குறித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைக்கு சென்ற பின்னரும் செந்தில் பாலாஜி ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த தெம்பு, திராணி ஸ்டாலினுக்கு உள்ளதா? ஆட்சி போய்விடும் என்ற பயத்தினால்தான் செந்தில்பாலாஜியை ஸ்டாலின் பாதுகாக்கிறார்.

கைதி செந்தில்பாலாஜி வசந்த மாளிகையில் வாழ்வது போன்ற வசதி சிறையில் செய்துதரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பிடியில் திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிக்கி வருகின்றனர். பொன்முடி வழக்கில் பறிமுதல் செய்தது 1 சதவீதம் மட்டுமே, இன்னும் 9 சதவீதம் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. அமலாக்கத்துறை வரட்டும் என்று சொல்வதில் இருந்தே உதயநிதிக்கு உள்ள பயம் தெரிகிறது. திமுக மாவட்ட செயலாளர்களால் அடையாளம் காட்டப்படுபவர்களுக்கே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். மணிப்பூர் கொடூரத்திற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். காவிரிக்காக சட்டப்போராட்டம் நடத்திய கட்சிதான் அதிமுக, பெங்களூருவுக்கு விருந்து சாப்பிடவே ஸ்டாலின் சென்றார்.” என்றார்.


