துணி துவைக்க அழைத்து சென்று 6 வயது மகளை குட்டையில் தள்ளி கொன்ற தாய்
வேலூர் அருகே துணி துவைக்க அழைத்து சென்று கல்குவாரி குட்டையில் மகளை தள்ளி கொன்று தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே கணியம்பாடி சாத்துப்பாளையம் அடுத்த தர்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (50). இவரது முதல் கணவர் இறந்துவிட்டதால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் டீ மாஸ்டராக வேலை செய்யும் ஜீவன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் ரேஷ்மா(6) 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் புவனேஸ்வரி காலை அப்பகுதியில் உள்ள கல் குவாரி குட்டைக்கு துணி துவைப்பதற்காக, மகள் ரேஷ்மாவையும் அழைத்துக்கொண்டு சென்றார். பின்னர் மாலை வரை இருவரும் வீடு திரும்பாத தால் உறவினர்கள் கல்குவாரி குட்டைக்கு சென்று பார்த்தனர். அங்கு தாயும், மகளும் கல்குவாரி குட்டையில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புவனேஸ்வரி மன உளைச்சல் காரணமாக குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கணவர் ஜீவனிடம் கூறிவந்ததாக தெரிகிறது. இதனால் ஜீவன் கடந்த நாட்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது மனைவிக்கு ஆறுதல் கூறியவர், இன்று வேலைக்கு சென்றுள்ளார். இந்த சூழலில் துவைக்க சென்ற புவனேஸ்வரியும், மகள் ரேஷ்மாவும் கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்துள்ளனர்.