கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் கொலை! நாமக்கல்லில் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எலக்ட்ரீசியன் கழுத்து அறுபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள நாராயண நகர் பகுதியில், லட்சுமி நாராயணா தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கின்றார். இவர் குமாரபாளையம் மட்டுமன்றி சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார்.

குடிபோதைக்கு அடிமையான இவர், நேற்று மாலை, வழக்கம் போல் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு, இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவு இவர் வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுபட்ட நிலையில், இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக குமாரபாளையம் போலீசருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி சோதனை செய்த பொழுது, கார்த்திக் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது.

இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை மேற்கொண்டபோது தற்கொலை செய்து கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லாததால், கொலை செய்யப்பட்டிருக்க கூடுமா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் பணிபுரிந்து வரும் நண்பர்களிடமும் போலீசார் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.


