செம்மரக் கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நள்ளிரவில் தொடர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


சென்னை, அண்ணா நகரில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் வசித்து வருகிறார். இவர் ஜெயா தொலைக்காட்சியின் உரிமையாளர் விவேக்கின் மாமனார் ஆவார். சென்னையில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் கைது செய்திருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று இரவு 9 மணியளவில் அண்ணா நகரில் உள்ள பாஸ்கரன் வீட்டில் இருந்து அவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று நள்ளிரவில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டு, இன்று காலை எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாஸ்கரனின் பர்னிச்சர் கடையில் இருந்து ஏராளமான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
