அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் மாற்றி அமைக்கப்படவேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் பெரம்பலூரில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார். அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி, பொருள்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டார்.
நியாய விலை கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்குவதற்கு அரசு கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
