சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சென்னை மாவட்டம் மழை வெள்ளத்தால் ஸ்தம்பித்து போயுள்ளது. பல்லாவரம், சோழிங்கநல்லூர், வட சென்னை, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, குன்றத்தூர், கொரட்டூர், மணலி உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை. மீட்புப் பணிகளும் , நிவாரணப் பணிகளும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், உண்ண உணவின்றி, பால், குடிநீர் இன்றி, மின்சாரம், தொலைத்தொடர்பு எந்த வசதிகளும் இன்றி தவித்து வருகின்றனர். அத்துடன் சூழ்ந்துள்ள மழைநீரில் பாம்பு உள்ளிட்ட வித ஜந்துக்களும் வீடுகளுக்குள் வருவதால் அச்சத்துடன் இருந்து வருவதாக கூறுகின்றனர். முன்னதாக பள்ளிக்கரணை பகுதியில் ஏராளமான கார்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பள்ளிக்கரணை பகுதியில் மீண்டும் ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பள்ளிக்கரணை பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்த நிலையில், 15 அடி வெள்ளத்தில் ஒரு குடும்பத்தினர் சிக்கியுள்ளனர். உடனடியாக தாய், தந்தை மற்றும் தங்கை ஆகிய 3 பேரையும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற அவர்களது மகன் அருண் என்கிற இளைஞர் முயன்றுள்ளார். குடும்பத்தினர் 3 பேரையும் பத்திரமாக மீட்ட அருண், வெள்ளத்தில் அடுத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 3 நாட்களுக்குப் பிறகு இளைஞர் அருணின் உடல் வெள்ளநீரில் மிதந்து வந்துள்ளது. இந்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.