மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்-ஷிர்டி நெடுஞ்சாலையில் ஷீரடிக்கு சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து மிது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. நாசிக்- ஷீரடி நெடுஞ்சாலையில் பதாரே என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். காயமடைந்த பயணிகளை உடனடியாக ஷீரடி மற்றும் நாசிக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது விபத்தில் காயமடைந்தவர்கள் நாசிக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் சுற்றுலா பயணிகள் என தெரிகிறது. அவர்களில் 7 பேர் பெண்கள், 3 பேர் ஆண்களாவர். பெரும்பாலான பயணிகள் தானேவைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
