தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்து நல்ல மனிதர் என்ற பெயரைப் பெற்று இம்மண்ணை விட்டு பிரிந்து சென்று விட்டார் கேப்டன் விஜயகாந்த். அவர் வாழ்ந்த காலத்தில் திரைத்துறைக்கு செய்த நன்மைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு, தான் நடிக்கும் படங்களில் இயக்குனர்களாக வாய்ப்பளித்தது. குறிப்பாக திரைக்கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை ஊமை விழிகள் படத்திற்குப் பின் மரியாதைக்குரிய பாதையில் பயணிக்கச் செய்தார். அதற்கு முன்பு வரை திரைப்பட கல்லூரியில் படிக்கிறேன் என்று யாரேனும் கூறினால் அவரை ஏளனமாக பார்க்கும் நிலை தான் இருந்து வந்துள்ளது. ஊமை விழிகள் படத்தில் பல திரைக்கல்லூரி மாணவர்கள் பணியாற்றியதன் விளைவாக, அப்படத்தின் மாபெரும் வெற்றி அவர்களுக்கு அங்கீகாரமாக மாறியது. அத்தகைய மாபெரும் ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ஆபாவாணன். இவர் சமீபத்தில் திரைப்படக்கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பின் உரையாற்றினார். அதில் கேப்டனின் மறைவு தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாக கூறியவர் அடுத்ததாக தனக்கு ஊமை விழிகள் 2 படத்டை இயக்கவிருப்பதாகவும்.
அதில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் உயிர் பெறச் செய்யப் போவதாகவும் கூறினார். இச்செய்தி அம்மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஊமை விழிகள் படத்தில் DSP தீனதயாளன் என்னும் கதாபாத்திரத்தில் கம்பீரமாக மிரட்டியிருப்பார் விஜயகாந்த். தற்போது அந்தக் கதாபாத்திரத்தை தான் ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உருவாக்க உள்ளதாக ஆபாவாணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இச்செய்தி பரவியது முதல், விஜயகாந்தை மீண்டும் திரையில் காண்பதற்கு பலரும் ஆவலோடு இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
- Advertisement -


