திண்டுக்கல்லில் மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் பரபரப்பு.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஜெயபிரதீபா. இவர் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. ஜெயபிரதீபாவின் தூரத்து உறவினர் டாக்டர் அசோக் பாண்டியன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் திண்டுக்கல் நாகல்நகரில் சுபா கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் அசோக் பாண்டியன் உறவினர்கள் முன்னிலையில் ஜெயப்பிரதீபாவை 2வதாக கடந்த 2023 ஜனவரி மாதம் நாகல் நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது 35 பவுன் தங்க நகைகள், 1.50 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் என சீர்வரிசையாக ஜெயபிரதீபா கொண்டு வந்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்து மூன்றாவது மாதத்தில் இருந்தே டாக்டர் அசோக் பாண்டியனின் தாய் அனுராதா தந்தை பாண்டியன் ஆகியோர் ஜெயபிரதீபாவை கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அசோக் பாண்டியன் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும் தற்பொழுது மீண்டும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவரை விட்டு பிரிந்து செல்லுமாறு மாமனார் பாண்டியன் மற்றும் மாமியார் அனுராதா கூறியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
மேலும் தனது உடமைகளை மீட்டு தர வேண்டும், என்னை போல் வேறு எந்த பெண்ணும் அசோக் பாண்டியனிடம் சிக்கி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட ஜெயப்பிரதிபா இன்று 18.05.24 திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் கண்காணிப்பாளர் பிரதிபாவிடம் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.