தேர்தல் பணிமனை திறக்க தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்பித்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான வில்லிவாக்கம் பாஜக மண்டல தலைவர் மருதுபாண்டி கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆர்.ஏ.புரம் 6-வது மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் சோபனா(55). இவருக்கு அண்ணாநகர் எச். பிளாக் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இவரது அண்ணா நகர் வீட்டில் மீனாட்சி(38) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்பு மீனாட்சி திருமங்கலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு உரிமையாளர் என கையொப்பமிட்டு போலி ஆவணங்களை தயாரித்து சோபனா வீட்டை அபகரிக்க திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், மீனாட்சியும், மருது பாண்டியும் சேர்ந்து போலி ஆவணங்களை சமர்ப்பித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் அந்த முகவரியில் தேர்தல் பணிமனை அமைக்க அனுமதி வேண்டி விண்ணப்பத்திருந்தனர்.
இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி, ஆவணங்களை சரிபார்த்தப் போது ஆவணங்கள் அனைத்தும் போலி என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் படி போலீஸார் வீட்டு உரிமையாளர் சோபனாவிடம் விசாரணை நடத்தியதில் மீனாட்சி மற்றும் மருதுபாண்டி இருவரும் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டை அபகரிக்க முயன்றதுடன் சோபனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அந்த இடத்தின் அசல் உரிமையாளர் சோபனா இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் முறையாக புகார் அளித்தன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மீனாட்சியை கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி கைது செய்தனர்.
மேலும் போலி ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்த தலைமறைவான பாஜக பிரமுகர் மருதுபாண்டியை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று திருமங்கலம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.