தொண்ணூற்று இரண்டு வயது முதியவர் ஒருவரின் இரத்த குழாய்களில் இருந்த அடைப்புகளை, இருதயம் துடித்து கொண்டிருக்கும் போதே, மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து தனியார் மருத்துவமனை சாதித்துள்ளது.சென்னையை சேர்ந்த 92 வயதான ஸ்ரீவல்சன் எனும் முதியவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த மூன்று மாதமாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடினார். அவரது ரத்தக் குழாயில் 4 அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.இதைத் தொடர்ந்து வலியால் துடி துடித்து வந்த ஸ்ரீவல்சனுக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதனையடுத்து இதயம் துடித்து கொண்டிருக்கும் போதே, அடைப்பு ஏற்பட்டிருந்த நான்கு இரத்த குழாய்களை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தும் சவாலான பணியை, மருத்துவ நிபுணர் பாஷி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனை குழுவினர் வெற்றிகரமாக சாதித்து முடித்தனர்.
தொடர்ந்து, இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தி, புனர் ஜென்மத்தை முதியவருக்கு தந்துள்ளதாக மருத்துவ நிபுணர் பாஷி, அறுவை சிகிச்சை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.