மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்தால் 45 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரியில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
“மக்களின் குறைகளைக் களைய, உங்கள் பகுதிகளிலேயே, ஜூலை 15 முதல் தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும் என்று கூறினார்.
பல துறைகள், சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எப்படி விண்ணப்பிப்பது என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதற்கான தன்னார்வலர்கள், உள்ளூர் அளவில் உங்கள் வீடுதேடி வந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்னென்ன சான்றுகள், ஆவணங்கள் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? போன்ற தேவையான அனைத்து தகவல்களும், வழிகாட்டுதல்களும் உங்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும்” என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.