தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் மூன்று முக்கிய அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நான்காவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களின் மிதமான முதல் அதிகனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி, தேனி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த நான்கு நாட்களாக தென்காசியில் தொடர் மழை பெய்து வருகிறது. மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க நான்காவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புலி அருவியில் தண்ணீர் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், இன்று காலையிலிருந்து தென்காசியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி இன்று இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சீசனை அனுபவிக்க குற்றாலத்திற்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாவிட்டாலும் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரை பார்த்து ரசித்து வருகின்றனர்.