அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜகவால் பழிவாங்கப்படுவதாகவும், அவர் விவகாரத்தில் சட்ட ரீதியாக நடந்துகொள்வதென்று முதல்வர் முடிவு எடுத்து அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தமிழக அமைச்சரவை மாற்றம் திமுகவுக்கு பின்னடைவு. திமுகவின் வீழ்ச்சிக்கான அறிகுறி என்று சொல்வது தவறாகும். திமுகவுக்கு எந்தவிதமான பின்னடைவும் இந்த நடவடிக்கை மூலம் கிடையாது. பொன்முடி ஒரு மேடையில் நாகரிகம் இல்லாமல் பேசியதாக குற்றச்சாட்டு. அதற்காகவே அவர் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது திமுகவின் கட்சி ரீதியிலான நடவடிக்கை. தற்போது அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை காலணிகளை எடுத்துவரச் சொன்னார். ஒரு வார்த்தை கண்டித்தாரா எடப்பாடி பழனிசாமி. முஸ்லிம்கள் குறித்து கேவலமான கருத்தை ராஜேந்திர பாலாஜி பதிவு செய்தார். அவர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு கேள்வியாவது எழுப்பினாரா எடப்பாடி பழனிசாமி?
ஆனால் ராணுவக் கட்டுப்பாடு கட்சியிலும் ஆட்சியிலும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார். அந்த அடிப்படையில் பொன்முடி பேசியது தவறு என்று உணர்ந்த உடன் அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். பொன்முடி என்பவர் திமுகவின் முன்னணி தளகர்த்தகர்களில் ஒருவராக இருந்தவர் பொன்முடி. தற்போதும் அவர் அப்படிதான் இருக்கிறார். அப்படி பட்ட சீனியரையே தவறு செய்தால் உடனடியாக அந்த பொறுப்பில் இருந்து விடுவித்துவிடுவார் என்று இந்த நடவடிக்கை மூலம் முதலமைச்சர் தெரிவிக்கிறார். இது கட்சிக்கு நற்பெயரைத்தான் தரும்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்துக்களை சட்ட ரீதியாக ஏற்கிறோம். ஆனால் நீதிமன்றம் சொல்லி இருக்கிற கருத்து சரியா தவறா? என்கிற விவாதம் உள்ளது. ஜாமின் கேட்டால் இருக்கு அல்லது இல்லை என்று சொல்ல வேண்டியதுதான். அது என்ன அமைச்சர் பொறுப்பு வேண்டுமா? ஜாமின் வேண்டுமா? அப்போது நீதிமன்றம் ஏதோ கருத்தை வைத்துக்கொண்டு அதன் மீது தன்னுடைய தீர்ப்புகளை கட்டமைக்கிறது என்கிற பார்வை உள்ளது. அதில் இருந்து நீதிமன்றங்கள் நலிந்துவிடக்கூடாது. இந்த வழக்கில் அனைத்து ஆவணங்களும் மின்மயமாக்கப்பட்டு விட்டன. அவற்றை அமலாக்கத்துறை ஏற்கனவே தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது.
தற்போது புதிதாக இவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறது நீதிமன்றம். இதன் மூலம் என்ன சாட்சிகளை கலைத்துவிட முடியும் என்று நினைக்கிறது. அதை புள்ளி விவரங்களுடன் நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள். அதனை அமலாக்கத்துறையிடம் கேட்டு சொல்லுங்கள். நீதிமன்றம் இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பதன் மூலமாக வேறு ஏதோ ஒரு தொனியை செந்தில்பாலாஜிக்கு நீங்கள் நிருவுவதற்கு முயற்சிக்கிறீர்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இந்த ஐயப்பாடுகளுக்கு மத்தியில் அவர் அமைச்சராக தொடர்வது என்பது சரியாக இருக்காது என்று முதலமைச்சர் நினைக்கிறார்.
சட்டம் என்ன சொல்கிறது. ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சராகவோ, மக்கள் பிரதிநிதியாவோ தொடர முடியாது. தற்போது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதா? தண்டனை நிரூபிக்கப்பட்டு விட்டதா? அதுவரை அவருக்கு அந்த அவகாசத்தை கொடுப்பது தான் ஜனநாயக நடவடிக்கையாகும். அவருக்கு நாளைக்கு எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம். செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வந்தார். இதில் எந்த இடத்தில் செந்தில்பாலாஜி சட்டத்தை மீறிவிட்டார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக இவர்கள் செய்தார்கள். ஆம் முதலமைச்சரும் அரசியல் காரணங்களுக்காக தான் செய்தார்.
சட்ட ரீதியாக எந்த சிக்கலும் வேண்டாம் என்று முதலமைச்சர் கருதுகிறார். மக்கள் முகம் சுழிக்கும் விதமாக இந்த ஆட்சியை கொண்டுசெல்ல வேண்டாம் என்ற நினைக்கிறார். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆட்பட வேண்டிய எந்த அவசியமும் முதலமைச்சருக்கு கிடையாது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு முதலமைச்சர் ஆயிரம் முறை யோசித்திருப்பார். செந்தில்பாலாஜி வேண்டும் என்றே பழிவாங்கப்படுகிறார். எல்லோர் மீதும் அமலாக்கத்துறையின் வழக்கு உள்ளது. ஆனால் செந்தில்பாலாஜியை கையாண்ட விதம் என்பது மற்றவர்களில் இருந்து வேறுபட்டது. பாஜகவின் கோட்டையான கொங்குமண்டலத்தில், அதனை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுத்தார். அதற்காகதான் பழிவாங்கப்படுகிறார்.
பாஜகவுக்கு வந்துவிட்டால் இந்த விவகாரத்தை முடித்து தருகிறோம் என்று பேரம் பேசுகிறார்கள். பாஜகவுக்கு போகாமல் கொள்கை வீரராக செந்தில்பாலாஜி நின்றுவிட்டார். எனவே அவருக்கு கைமாறு செய்யும் விதமாக அவர் வகித்த பொறுப்பை கொடுத்தார். தற்போது ஒரு நெருக்கடி அதனால் தன்னுடைய சகாக்களை அழைத்துப்பேசி சுமுகமான முடிவை எடுத்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு முதலமைச்சர் செயல்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.