நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடிக்கு பலத்த அடி கொடுத்தவர் அண்ணாமலை. அவர் மதுரை பாஜக கூட்டத்திற்கு ஆட்களை செட் செய்து அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மத்திய அமைச்சர் எல்.முருகன், சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சி ஒன்று தங்கள் கூட்டணிக்கு வரும் என்று சொல்லியிருந்தார். அது அரசியலுக்காக தானே தவிர உண்மை இல்லை. பாஜகவில் எல்.முருகன், தமிழிசை, சீனிவாசன் போன்றவர்கள் தங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். இயல்பாகவே அதிமுகவினருக்கு அடாப்டபிலிட்டி, பொறுமையாக செல்வார்கள். அதனால் தமிழிசை, எல்.முருகன் போன்றவர்கள் தங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக ஊடகங்களில் பேசி வருகிறார்கள். வானதி சீனிவாசன் தனக்கான வாய்ப்பு வரும் என்று பொறுமையாக காத்திருக்கிறார். அண்ணாமலை, அவர் பேசாமலே நான் தான் தமிழக பாஜகவின் முகம் என்று காண்பித்துவிட்டார்.
மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலைக்கு பெரிய அளவிலான தொண்டர்கள் ஆதரவு இருந்தது. அதை பார்த்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பெருமை தான் ஏற்பட்டது. ஆனால் அது ஆட்களை அழைத்துவந்து செட்டிங் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. அமித்ஷா தன்னிடம் இருந்து தலைவர் பதவியை பறித்ததால், அவருக்கு தனது பலத்தை காட்டுவதற்காக செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி அண்ணாமலை ஆட்களை செட் செய்தார் என்றால், அது அமித்ஷாவுக்கே சவால் விடுக்கும் செயலாகும். தற்போதுகூட அவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவின் பலத்துக்கு ஏற்பட இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார். என்னுடைய புள்ளி விபரங்களை வைத்து அவர் கொடுக்க வில்லை. ஒரே நேரத்தில் இருவரும் சர்வே நடத்தியிருக்கலாம் அல்லவா?. மோடியின் ஆதரவாளரான நான், 2024 தேர்தலில் அதிமுகவை நம்பி, பாஜக ஏமாந்தது போல 2029ல் நடக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வந்துள்ளது. அதனால் இந்த கணக்கின் உண்மைத் தன்மை வலுப்படுகிறது. அதனால் எடப்பாடி பழனிசாமி இதில் இருந்து தப்ப முடியாது.
பாஜகவில் நாலு பேர் ஒற்றை சீட்டுகளை வாங்கிக்கொண்டு போவதற்கு எடப்பாடியின் கைக்கூலிகளாக நிற்பார்கள். இதன் மூலம் அந்த கணக்கு அடிபட்டு போய் விடும். பாஜக நலனில் அக்கறை உள்ளவர்கள் என்றால் பலத்தின் அடிப்படையில் சீட்டுகளை கேட்க வேண்டும். ஏற்கனவே மக்களவை தேர்தலில் 12 இடங்கள் கேட்டு 6 இடங்கள் கொடுத்ததால் தான் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. 5 சதவீத இடங்களை பாஜகவுக்கு தரலாம் என்று ஓபிஎஸ் சொல்லியும், 2 சதவீத இடங்களை தான் தர முடியும் என்று எடப்பாடி சொல்லிவிட்டார். 2024ல் கூட்டணியில் இருந்து சென்றதால் விளவங்கோடு தொகுதியில் 2 இடத்தில் இருந்தவர்களை, அண்ணாமலை 4வது இடத்திற்கு தள்ளினார். அதனால் அவர் கூட்டத்திற்கு ஆட்களை செட் பண்ண தேவையில்லை. அண்ணாமலைதான் தமிழ்நாடு பாஜகவுக்கு பலம். எல்.முருகன் சொல்வது போன்று மதிமுக, பாஜக கூட்டணிக்கு வராது. திமுக கூட்டணி உறுதியாக இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதோடு அவர்கள் தொடர்வார்கள். திமுக கூட்டணியில் இருந்து யாராவது வெளியேறினால் அது தண்ணீரில் இருந்து தரையில் விழுந்த கதையாக தான் இருக்கும்.
திமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்புகள் என்பது கிடையாது. ஏனென்றால் முடிவை தீர்மானிக்கின்ற இடத்தில் அந்த கூட்டணியில் யாரும் இல்லை. ஸ்டாலின் 25 சதவீதம், திருமாவளவன் 0.7 சதவீதம், இடதுசாரிகள் தலா 0.5 சதவீதம். காங்கிரஸ் 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை தான் வைத்துள்ளனர். இவர்களில் யாருக்கும் எப்படி ஜெயித்தது என்று தெரியாது. தோற்றுப் போனவர்கள் எல்லாம் ஒரு கூட்டணி கெமிஸ்ட்ரியில் ஜெயித்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலை சந்தித்து 3வது இடத்திற்கு சென்றவர்கள். 2019ல் 53 சதவீதம் வாக்குகளையும். 2021ல் 45 சதவீதம் வாக்குகளையும் பெற்றிருந்தனர். திமுக கூட்டணிக்குள் கமல்ஹாசன் வந்தபிறகு வாக்குகள் 47 சதவீதமாக அதிகரித்துள்ளது. 3 தேர்தல்களில் திமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளை பிடித்திருக்கிறது. அந்த கூட்டணியில் இணைய தேமுதிகவும் முயற்சித்து வருகிறது.
கடைசியாக 2.6 சதவீத வாக்குகள் தேமுதிக எடுத்துள்ளது. பிரேமலதாவின் பேச்சு, நடவடிக்கைகள் அதை தெளிவாக காட்டுகிறது. அவர் திமுகவை பெரிய அளவில் விமர்சிப்பதும் கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம், தனது இருப்பை காட்டுவதற்காக திமுக அரசை விமர்சித்து பேசுகிறார். திமுக கூட்டணி வெற்றி என்பது கூட்டணி கெமிஸ்ட்ரியால் வந்த வெற்றியாகும். கூட்டணியில் இருந்து வெளியேறினால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு தான் பிரச்சினையாகும். ஸ்டாலினும் கூட்டணி தான் வெற்றிக்கு காரணம் என்று அங்கீகரித்து செல்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.